siruppiddy

வியாழன், அக்டோபர் 03, 2013

உலகின் மிகப்பெரிய405 அடி உயர கோபுரத்துடன் கோயில்


பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.
பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.
(படத்தில் காணப்படுவது கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும்)